top of page

நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

  • Aug 13
  • 1 min read

நடிகர் விக்ரம் அரியவகை லார் கிப்பான் குரங்குடன் இருக்கும் வீடியோவை சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், அந்த குரங்கை வைத்திருப்பது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து தமிழக வனத்துறை இந்த விவகாரம் குறித்து விசாரணையை தொடங்கியது.


விக்ரம் வெளியிட்ட வீடியோவில் அவர் குரங்குடன் கொஞ்சி விளையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதன் பின்னர், குரங்கின் உரிமை, அது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது மற்றும் அதற்கான ஆவணங்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.


லார் கிப்பான் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட அரியவகை உயிரினமாகும். இதன் இந்தியாவில் வைத்திருப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக உரிய ஆவணங்கள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது தற்போது வனத்துறையின் விசாரணையில் உள்ளது.


வீடியோவில் இருந்த குரங்கு எங்கே?

இந்த விவகாரத்தில் நடிகர் விக்ரமுக்கு தமிழக வனத்துறை 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வீடியோவில் இடம்பெற்றிருந்த லார் கிப்பான் தற்போது எங்கே உள்ளது, அதன் உரிமை மற்றும் ஆவணங்கள் என்ன என்பது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்குமாறு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதற்கிடையில், குரங்குகள் தொடர்பான விசாரணை ஈரோட்டிலும் நடைபெற்றுள்ளது. பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதனிடம் இருந்த மூன்று லார் கிப்பான்களில் ஒன்று உயிரிழந்துவிட்டதாகவும், இரண்டு குரங்குகள் தற்போது உயிருடன் இருப்பதாகவும் வனத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த குரங்கின் இறப்பு குறித்து அதிகாரிகளிடம் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டதா என்பதும் விசாரணையில் உள்ளது.


மேலும், குரங்குகளின் கொள்முதல் மற்றும் உரிமை தொடர்பான ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த விசாரணையின் முடிவில்தான் லார் கிப்பான் குரங்கு தொடர்பான சட்ட விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது தெளிவாகும்.



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page